நெகிழ்ச்சி சம்பவம்:தூத்துக்குடியை சேர்ந்த யாசகர், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன். யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் பூல் பாண்டியன் , யாசகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தில், தனது சாப்பாடு செலவுக்கு போக மீதமுள்ள தொகையை தமிழக அரசின் பொது நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி, கொரோனா நிவாரண நிதி என பல்வேறு நிவாரண நிதிகளுக்கு 2010 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல்லை சுற்றியுள்ள கோவில்களில் எடுத்த யாசகம் மூலம் கிடைத்த ரூ. 10 ஆயிரத்தை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிவாரண நிதிக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனிடம் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பூல் பாண்டியன், கடந்த ஒரு மாதமாக மதுரையை சுற்றியுள்ள கோவில்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்த யாசகத்தில் கிடைத்த ரூ.1௦ ஆயிரத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூபாய் 50 லட்சத்து 60 ஆயிரத்தை தமிழக அரசின் பல்வேறு நிவாரண நிதிகளுக்காக வழங்கி உள்ளதாக செய்தியாளரிடம் பூல்பாண்டியன் தெரிவித்தார்.
வசதி படைத்த பலரும் இன்று பிறருக்கு உதவி செய்ய மறுக்கும் நிலையில் தூத்துக்குடி சேர்ந்த இந்த யாசகர் தனது அன்றாட உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு மீதமுள்ள பணத்தை பொதுமக்களுக்கு உதவும் வகையில் மனநிறைவோடு கொடுக்க வந்திருந்தது மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்திருந்த பொது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
