தூத்துக்குடி கலெக்டருக்கு ஒரே நாளில் 320 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அப்போது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 320 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காக்க தேவையான மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் நில அளவைத்துறையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து பணியிடையே காலஞ்சென்றவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணிநியமன ஆணை, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை 100 சதவீதம் நிறைவு செய்த விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியை சேர்ந்த 28 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பணியின்போது இறந்த அங்கன்வாடி பணியாளரின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு குடும்ப நல நிதித்தொகை தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலை ஆகியவற்றை ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.
இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வே.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வீரபுத்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
