கோவில்பட்டியில் பூக்கள் விலை உயர்வு

தமிழகம் முழுவதும் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், வா்த்தக நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் ஸ்டோர்ஸ், வாகனப் பணிமனை கூடங்கள், லாரி பட்டறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் ஆயுதபூஜையில் இடம் பெறும் பொரிகடலை, வெல்லம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளில் பூஜை செய்வதுடன், வாகனங்களுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்யப்படும். இதனால் பூஜை பொருட்கள் வாங்குவதற்கும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆயுதபூஜையையொட்டி கோவில்பட்டி மாநகரில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மார்க்கெட் அருகாமையில் கிருஷ்ணன் கோவில் தேரடி அருகே உள்ள பூச்சந்தையில் பூக்கள் வாங்குவதற்காக மக்கள் அதிகஅளவில் கூடினர். இதனால் பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது.
கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ, முல்லைப்பூ ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று விலை உயர்ந்து ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1.2௦௦, முல்லைப்பூ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. ரூ.2௦0-க்கு விற்ற மஞ்சள் செவ்வந்திப்பூ ரூ.350-க்கும், வெள்ளை செவ்வந்தி பூ ரூ.400க்கும் விற்கப்பட்டது.
ரூ.2௦௦-க்கு விற்ற அரளிப்பூ ரூ.380,.400-க்கும், கோழிக்கொண்டை ரூ.40-க்கும், ஓசூர் ரோஸ் ரூ.300-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.2௦௦க்கும் விற்பனை ஆனது. கேந்தி பூ ஒரு கிலோ ரூ.80, 100 வீதம் விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை அதிகரித்து இருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால் பூக்கள் வியாபாரமும் ஜோராக நடைபெற்றது.
இது குறித்து ஓம்பிரகாஷ் மலரகம் கமிஷன் மண்டி உரிமையாளர் கே.டி,ஆனந்த் கூறுகையில், “கோவில்பட்டி பூச்சந்தைக்கு கோவில்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் ஓசூர் பகுதியில் இருந்தும பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. பூக்கள் விளைச்சல் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாகவும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டும் விலை அதிகரித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு நாளை வரை நீடிக்கும்”‘ என்றார்.
