கோவில்பட்டியில் பலத்த மழை; புதுரோட்டில் மரம் சாய்ந்தது

கோவில்பட்டியில் இன்று மாலை திடீர் என மேகம் கருத்து மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் வரை இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது.
கோவில்பட்டியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மெயின்ரோட்டில் உள்ள ஓடையில் தண்ணீர் நிறைந்து ஓடியது. இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தில் வழக்கம் போல் மழை தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை பெய்து கொண்டிருந்த போது புதுரோட்டில் சாலையோர மரம் ஒன்று சாய்ந்து அந்த வழியாக வந்த வேன் மீது விழுந்தது. இதில் வேனின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. நல்ல வேளையாக டிரைவர் காயமின்றி தப்பினார்.மரம் சாய்ந்து விழுந்ததால் புதுரோடு மேட்டில் இருந்து இறக்கம் வரமுடியாமல் ஒரு பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் உடனடியாக கிரேன் மூலம் சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். மழை பெய்யத்தொடங்கியதும் பாதுகாப்பு கருதி மின்சப்ளை நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் மின்விநியோகம் சீரானது.
கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் இன்று மாலை கனமழை பெய்தது.
