தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்திய 5 பேர் சிக்கினர்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக மஞ்சள், பீடி இலைகள் மற்றும் கஞ்சா போன்றவை கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் இங்கேயே பிடிபட்டு விடுகின்றனர். பலர் கடத்திச் சென்று இலங்கையில் பிடிபடுகிறார்கள்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் போதைப் பொருள் கடத்திச் சென்று அங்கு பிடிபட்டவர்கள் 14 பேர் இலங்கையில் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இலங்கை அருகே தூத்துக்குடியில் இருந்து சென்ற ஒரு மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
படகில் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியே 35 லட்சம் ஆகும். இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடியாகும். இதையடுத்து படகுடன் கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் படகில் இருந்த 5 பேரை கைது செய்தனர்.
இலங்கையில் பிடிபட்ட படகு ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இது குறித்து கியூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய, மாநில உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
