கோவில்பட்டி அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்து; ரூ.2 லட்சம் வாத்து முட்டைகள் உடைந்து நாசம்

தஞ்சாவூர் பகுதியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மினி லாரி ஒன்று வாத்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று இரவு கிளம்பியது. மினி லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூர் கிராமத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த பால்ராஜ் உதவியாளராக வந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருநெல்வேலி செல்லும் சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தில் இன்று காலை வந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மினி லாரியில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 26 ஆயிரம் வாத்து முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன. மினி லாரி டிரைவர் மனோஜ் குமார், அவருடன் வந்த உதவியாளர் பால்ராஜ் இருவரும காயமின்றி தப்பினார்கள். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
