தேசிய பசுமை படை மாணவர்களின் சூழலியல் சுற்றுலா; 3 ஆண்டுக்கு பிறகு குருமலை வனப்பகுதிக்கு சென்றனர்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை சார்பில் தேசிய பசுமை படை மாணவர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தொடர்பான சூழலியல் சுற்றுலா கோவில்பட்டியில் தொடங்கி குருமலை வனப்பகுதி வரை நடைபெற்றது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை சார்பில் தேசிய பசுமை படை,சுற்றுச்சூழல் மன்றங்களின் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 2019 பிப்ரவரி 9-ம் தேதி பேச்சுப்போட்டி,ஓவியம்,கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு காலமாக இருந்ததால் சூழலியல் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
தற்போது சகஜ நிலை திரும்பியதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்ட பசுமை படை மாணவர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நேரடி கள அனுபவம் பெறுவதற்கு சூழலியல் சுற்றுலா கோவில்பட்டியிலிருந்து குருமலை வனப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வனத்துறை அலுவலர்களால் மரக்கன்று உற்பத்தி, மரங்களின் பயன்பாடு, பல்லுயிர் பெருக்கம், பருவநிலை மாற்றம், வனஉயிரினங்கள், நீர் ஊற்றுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.


15க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்ட தேசிய பசுமைப்படை மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு, சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பசுமை படை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சூழலியல் சுற்றுலாவை கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
கோவில்பட்டி வனச்சரகர் பாரதி, வனவர் கேசவன், தலைமையில் வனத்துறை அலுவலர்கள், ஊர்வன ஆராய்ச்சியாளர் பீட்டர் ஆகியோர் சூழலியல் மேம்பாடு குறித்து பயிற்சி அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜமாணிக்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மணிகண்ட மூர்த்தி, பூல் பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தேசிய பசுமை படை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் செய்திருந்தார்.
