கன்னியாகுமரி மாவட்டத்தில் 4-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக தனது பாதயாத்திரையை அவர் காஷ்மீரில் நிறைவு செய்ய உள்ளார்.
இதற்கான தொடக்க விழா கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி ராகுல்காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். 2-வது நாளன்று அகஸ்தீஸ்வரம் முதல் நாகர்கோவில் வரை ராகுல்காந்தி பாதயாத்திரையாக வந்தார். 2-வது நாள் பயணத்தை முடித்ததும் இரவில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் கேரவனில் தங்கினார். 3-வது நாளான நேற்று காலை பாதயாத்திரையை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இருந்து தொடங்கினார்.

இன்று (சனிக்கிழமை) காலை முளகுமூட்டில் இருந்து 4-வது நாள் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்கினார். அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்டு நின்று பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் காங்கிரஸ் கட்சியின் கொடிகளும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது. பாதயாத்திரையின் போது ராகுல்காந்திக்கு மாணவ, மாணவிகள் வரவேற்றனர்.
இன்று முளகுமூட்டில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி தொடங்கி கேரள மாநில எல்லையான செருவாரகோணத்தில் நிறைவு செய்கிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் பாதயாத்திரையை மேற்கொள்ள உள்ளார். அங்கு அவர் 18 நாட்கள் சாலை வழியாக நடந்தே சென்று மக்களை சந்திக்கிறார்.
