தி.மு.க.எம்.எல்.ஏ.க்களிடம் உண்மை கண்டறியும் சோதனை; முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரின் திருமணம் மதுரை கலைஞர் அரங்கத்தில் நடந்தது. இதில், முன்னிலை வகித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமண நிகழ்வை நடத்தி வைத்து உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அவரிடம் இருக்கும் எம்.எல்.ஏ.க்களே அவரிடம் பேசுவதில்லை. எங்கள் (தி.மு.க.) எம்.எல்.ஏ. வந்து பேசுகிறார்கள் என்று அவர் ‘புரூடா’ விட்டுக்கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்ற தேர்தலில் தோல்வி, உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வி. அ.தி.மு.க கட்சி இப்போது பிளவுபட்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி என்று 2 அணிகளாக பிளவுபட்டிருக்கிறது. இப்ப அவர் (எடப்பாடி பழனிசாமி) இருக்கும் பதவியே ‘டெம்ப்ரவரி’ (தற்காலிகமானது) பதவி. இந்த ‘டெம்ப்ரவரி’ பதவியை வைத்துக்கொண்டு இன்னொரு கட்சியை விமர்சிக்க அவருக்கு தகுதி இருக்கிறதா? நானும் இந்த நாட்டில் இருக்கேன் என்று காட்டிக்கொள்வதற்காகதான், காமெடி கதையை எல்லாம் விட்டுக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டார்
இந்நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறும்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அப்படி நடத்தினால், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியே முதல்-அமைச்சராக தொடர வேண்டும் என விரும்புவது தெரியும். தன் நிலை மறந்து முதல்-அமைச்சர் வசைபாடியிருப்பது அந்த பதவிக்கு அழகல்ல என்று அவர் கூறி இருக்கிறார்.
