கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் வரை 15 கி.மீ.நடந்து சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்; அரசு மருத்துவமனையில் ஆய்வு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகலில் கோவில்பட்டியில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமனியன் கோவில்பட்டி வந்து தங்கி இருந்தார்.
இன்று காலை அவர் கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் வரை நடந்து சென்றார்.டவுசர், டீ-சர்ட் அணிந்து இருந்த அவர் சாலையோரம் வேகமாக நடக்க தொடங்கினார். அவருடன் உதவியாளர் மற்றும் அதிகாரிகள் சிலர் நடந்து சென்றனர். அவருக்கு பின்னால் அவரது கார், பாதுகாவளர்கள் கார், மருத்துவ உயர் அதிகார் கார்கள் அணிவகுத்து சென்றன.

காலை நேரத்திலேயே வெயில் கடுமையாக இருந்தது. ஆனாலும் அமைச்சர் மா.,சுப்பிரமணியன் சிறிதும் தளராமல் ஒரே வேகத்தில் நடந்து சென்றார். 15 கி.மீ.தூரம் நடந்து எட்டயபுரம் சென்றடைந்த அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை சந்தித்து குறைகள் எதுவும் இருக்கிறதா என்று கேட்டார். பின்னர் மருத்துவமனை அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
ஆய்வின்போது சில பணியிடங்களில் பணியாளர்கள் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது என்றும் , அதனை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை வருகை பதிவேட்டில் அமைச்சர் மா சுப்பிரமணியன் எழுதியுள்ளார். ஆய்வின் போது கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கா.கருணாநிதி உடனிருந்தார்.
அமைச்சரின் நடை பயணத்தை வேடிக்கை பார்த்தவர்கள் இவ்வளவு தூரம் நடந்து வந்து இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டனர். அதிகாரிகளும் வியந்து போனார்கள்.
