• June 7, 2025

எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றால் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா? கடம்பூர் ராஜூ அதிரடி பேட்டி

 எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றால் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா? கடம்பூர் ராஜூ அதிரடி பேட்டி

அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., கோவில்பட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அ.தி.மு.க நம்பர் 1 இயக்கமாக விளங்குகிறது. வெற்றி தோல்வி பழகிப்போன ஒன்று. எனவே அ,தி.மு.க.தொண்டர்கள் கட்சியை விட்டு வேறு எங்கும் செல்லமாட்டார்கள். இவ்வளவு ஆணித்தரமாக 1௦௦ சதவீதம் இருப்பார்கள்.
கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களில் சிலர் அங்குமிங்கும் அணி மாறலாம். ஆனால் ஆணிவேராக, அச்சாணியாக தொண்டர்கள் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அசைக்க முடியாது,.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்ததே எடப்பாடி பழனிசாமி தான். மடியில் கணம் இல்லை வழியில் பயம் இல்லை.
விசாரணை கமிஷன் அமைக்க சொன்னவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம். அவர் தான் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கினார். பின்னர் கட்சியில் இணைந்தபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதன்பேரிலேயே எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்த போது விசாரணை கமிஷன் அமைத்தார். விசாரணை கமிஷன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் போது நாங்களும் விவாதத்தில் கலந்து கொள்வோம்.
இதற்கு முன்பு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் இதேபோல் கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் மீண்டும் இணைந்த பொது இரட்டை தலைமை என்று முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை சந்தித்தோம், எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல் அமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்த நேரத்தில் வெறும் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது,
தேர்தல் தோல்வி பற்றி தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை என்பது பிரதான கருத்தாக வெளிப்பட்டது. தலைமைக்கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் 98 சதவீதம் ஒற்றை தலைமை பற்றி கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். ஆனால் யார் அந்த ஒற்றை தலைமை என்பது பற்றி விவாதிக்கவில்லை.
அதன்பின்னர் நடைபெற்ற அ.தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் இறுதிவரை ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். ஒற்றை தலைமை என்ற முடிவோடு தான் கூட்டம் முடிந்தது, யார் பொதுசெயலாளர் என்று முடிவு செய்யப்படவில்லை. இதை ஓ.பி.எஸ்.ஏற்றுக்கொண்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாம். இதற்கு யாரும் தடை போடவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு 98 சதவீதம் பேர் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டும் தனக்கு மெஜாரிட்டி இல்லாததால் கூட்டத்தின் இறுதியில் எஸ்.பி.வேலுமணி நன்றி கூறுகையில் வெளியேறினார்.. அப்போது வைத்திலிங்கம் தகாத வார்த்தைகள் பேசியதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன.
அதன்பிறகு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்காக இருக்கை போடப்பட்டு இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. அவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாம். அல்லது அவரது பெயரை யாராவது முன்மொழிந்து இருக்கலாம். இந்த நியதியை எல்லாம் செய்யாமல் இருந்ததால் தான் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் 2647 பொதுக்குழு உறுப்பினர்களில் 2538 பேர் ஒரு மனதாக எடப்பாடி பழனிசாமியை தற்காலிக பொதுசெயலாளராக தேர்ந்தெடுத்தார்கள். இது தான் நடந்த வரலாறு.
இடையில் ஒரு தீர்ப்பு வந்தது, நாங்கள் அது பற்றி கவலைப்படவில்லை. மெஜாரிட்டி எங்கள் பக்கம் இருந்தது. அப்போது ஓ.பி.எஸ்., தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்றார். இன்று அதையே நாங்கள் திரும்ப சொல்கிறோம். நியாயமான தீர்ப்பு வந்திருக்கிறது.
இப்போது கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் என்ன தவறு. அன்றைய சூழ்நிலையில் எடுக்கப்பட்ட இரட்டை தலைமை முடிவு தற்காலிகமானது. ஒற்றை தலைமையை ஏற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் கட்சிக்கு வரலாம்,
அடுத்த கட்டமாக பொதுசெயலாளர் தேர்தல் நடைபெறும். இதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தவிர யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.அதிகமான தொண்டர்கள் ஆதரவு இருப்பதால் எடப்பாடி பழனிசாமி போதுசெயலாராக தேர்ந்தெடுக்கப்படுவார்.
சட்டமன்ற தேர்தலில் பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் காரணமாக தான் தி.மு.க.வெற்றி பெற்றது. மக்கள் இன்றைக்கு ஆதங்கத்தில் உள்ளனர். அ.தி.மு.க.ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் பதவி வேண்டாம் என்று வந்தால் கட்சியின் தலைமை முடிவுசெய்யும் . அவர் மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவார்கள்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *