• June 7, 2025

`அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் ஜீரோ’- டி.ஜெயக்குமார்

 `அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் ஜீரோ’- டி.ஜெயக்குமார்

அ.தி.மு.க.பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டியின் பொது கூறியதாவது:-

ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். ஜூலை 11 ம் தேதி கூட்டப்பட்ட கழக பொதுக்குழு அது சட்டப்படி செல்லும். அதோடு தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பு என்பது ஆகும்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து ஒவ்வொரு கழக தொண்டர்களும் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகிறார்கள். கழக சட்ட திட்ட விதிகளின்படி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என்கின்ற தீர்ப்பை வரவேகும் வகையில் எழுச்சியோடு தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த தீர்ப்பினை நாம் உற்றுநோக்கும்போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒற்றை தலைமை என்ற அங்கீகாரத்தையும் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்பது வரவேற்கத்தக்க நல்ல தீர்ப்பாகும். 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு நல்லபடியாக நடைபெற்றது என்ற கருத்து நீதிமன்றத்தால் சொல்லப்பட்டு இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செல்லும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி :- ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செல்லுமா?

பதில் :- கண்டிப்பாக. 11 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்டப்படியாக நடைபெற்றது என்ற தீர்ப்பு நீதிமன்றத்தால் சொல்லப்பட்டிருக்கும்போது ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செல்லும்.

கேள்வி :- இது இறுதித் தீர்ப்பு இல்லை. நாங்கள் மேல் முறையீடு செல்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க.வில் ஒரு கண்ணா மூச்சு நடைபெற்று வருகிறதே?இதனை எப்போது நிறுத்தப்போகிறீர்கள்.

பதில் :- கண்ணாமூச்சியை அவர்கள் காட்டலாம். நாங்கள் கண்ணாமூச்சி காட்டவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் சட்டப்படி, விதிப்படி, புரட்சித்தலைவர் வகுத்துத் தந்த, புரட்சித்தலைவி அம்மா எந்த வகையில் பொதுக்குழுவைக் கூட்டினார்களோ , அந்த அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்டப்பட்டது. சட்டப்படியாக நாங்கள் செல்லும் காரணத்தினாலே நிச்சயமாக தர்மம் வென்றுள்ளது. நியாயம் வென்றுள்ளது. சட்டப்படி நாங்கள் செல்லும் காரணத்தினாலே எங்கு சென்றாலும் வெற்றி பெறுவோம்.
கேள்வி :- அரசியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்.

பதில் :- ஜீரோ.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *