எம்.ஜி.ஆர். ஆலய மகா கும்பாபிஷேகம்; சைதை துரைசாமி, ஏ.சி சண்முகம், ஐசரி கணேஷ் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆலயம் அமைத்து அவரது பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தர் கலைவாணன் குடும்பத்தினர் முயற்சியில் எம்.ஜி.ஆரை நேசிக்கும் அவரது தொண்டர்கள் பக்தர்கள் ஒத்துழைப்பில் எம்.ஜி.ஆர். ஆலயம் உருவானது.
தற்போது இந்த ஆலயத்தின் நுழைவாயில் திருக்கோபுரம் அமைக்கப்பட்டு ஆலயத்தின் உள்ளே எம்.ஜி.ஆர். திருஉருவ சிலை கர்ப்ப கிரகத்தில் நிறுவப்பட்டு இதற்கான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயரும், உலக எம்ஜிஆர் பேரவை தலைவருமான சைதை சா. துரைசாமி ,எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகம் ,வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கே. கணேஷ், தேனி ஜீவானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மற்றும் எம்.ஜி.ஆரின் அண்ணன் பேரன் எம்.ஜி.சி. பிரதீப் ,திராவிட இயக்க ஆய்வாளர் துரை கருணா, முகப்பேர் என்.இளஞ்செழியன் உள்ளிட்ட ஏராளமான எம்.ஜி.ஆர். பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான எம்.ஜி.ஆர். பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர் .


ஒரு இறைவன் திருக்கோயில் ஆகம விதிப்படி எப்படி கும்பாபிஷேகம் நடைபெறுமோ அதேபோல கொடியேற்று விழா, பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் என்று வெகு விமரிசையாக இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். ஆலய நிர்வாகிகள் கலைவாணன் , சங்கீதா, ஜீவிதா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு நத்தமேடு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான செஸ் போர்டு ,கேரம்போர்டுகள் ,கைப்பந்துகள் , கால்பந்துகள், கூடைப்பந்துகள் உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை சைதை சா துரைசாமி வழங்கினார்.
பால்குடம் எடுத்த ஏராளமான பெண் பக்தர்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவையொட்டி ரத்ததானம் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழா முடிந்ததும் பகல் 11 மணிக்கு எம்.ஜி.ஆர்.ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது, மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். திருவீதி உலா நடக்கிறது,. இரவு வரையிலும் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
