திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதிஉலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 8-ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
6 மணிக்கு சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பிரம்மா அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் வீதிஉலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
பின்னர் பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி, மகா தீபாராதனை நடந்தது. பகல் 11.10 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை நிற கடைசல் சப்பரத்தில் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி பெருமாள் அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான 26-ந் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.