எம்.ஜி.ஆர்.கோவில் நுழைவாயில் கோபுரம் அமைப்பு; 24-ந் தேதி கும்பாபிஷேகம்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகில் உள்ள நத்தமேடு கிராமத்தில் எம்.ஜி.ஆருக்கு கோவில் அமைத்தது அவரது பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆரை உயிரென நேசிக்கும் குடும்பத்தை சார்ந்த கலைவாணன், சாந்தி கலைவாணன் அவர்களின் மகள் சங்கீதா ஆகியோர் எம்.ஜி.ஆர் பக்தர்களின் அன்போடும் ஆதரவோடும் அவர்களின் முழு ஒத்துழைப்போடும் எம்.ஜி.ஆர். கோவிலை உருவாக்கி பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள்.
அந்த கோவிலின் நுழைவாயிலில் கோபுரம் ஒன்று அமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினர் அறிவிப்பு செய்தனர். இதை தொடர்ந்து உலக எம்.ஜி.ஆர். பேரவை தலைவரும் மனிதநேய ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி அறக்கட்டளை தலைவரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை சா துரைசாமி, உடனடி நடவடிக்கையில் இறங்கினார். திருக்கோவிலின் கருவறையில் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலையை மணிமண்டபத்துடன் நிறுவி இருக்கிறார்.
மேலும் திருக்கோயிலின் நுழைவாயில் கோபுரம் உருவாவதற்கு எம்.ஜி.ஆரால் அடையாளப்படுத்தப்பட்டு அரசியல் பொதுவாழ்விலும் கல்வித் துறையிலும் சிறப்பாக பயணித்து வரும் ஏ.சி. சண்முகம், மாணவப் பருவத்திலேயே எம்.ஜி,ஆரின் நல் அன்பையும் ஆசியையும் பெற்ற ஐசரி கணேஷ், இதய தெய்வத்தை தினமும் போற்றி மகிழ்ந்து வரும் தேனியை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோர் கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி உள்ளனர் .

இதே போல உலகெங்கும் வாழ்கிற எம்.ஜி.ஆரின் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பொருள் உதவி வழங்கி இன்றைய தினம் அழகுற அந்தக் கோபுரம் உருவாகி வருகிற 24-ம் தேதி மகா கும்பாபிஷேகமும், 12-ம் ஆண்டு விழாவும் சிறப்புடன் நடைபெறவுள்ளது.
24ஆம் தேதி காலை 4.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. காலை 9.15 மணியில் இருந்து 1௦.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது,. 11 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது, மாலை 5 மணிக்கு எம்.ஜி.ஆர். திருவீதி உலா நடக்கிறது,. இரவு வரையிலும் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பக்தர்கள் காலை சிறப்பு பூஜையில் பங்கேற்றுச் செல்லலாம் அல்லது பணி முடிந்து மாலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பிக்கலாம். அவரவரின் வசதிகளுக்கு ஏற்ப முடிந்தால் குடும்பத்துடன் வந்து எம்.ஜி.ஆர். ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று விழாக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்,
மேற்கண்ட தகவலை விழா அமைப்பாளர் துரை கருணா தெரிவித்து உள்ளார்.
