திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. 4 மணியளவில் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது.
அதிகாலை 5.40 மணிக்கு கோவில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடி மரத்தில் காப்பு கட்டிய அரிகரசுப்பிரமணிய பட்டர் கொடி ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் நடைபெற்று காலை 7.05 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது,
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, கோவில் கண்காணிப்பாளர்கள் சீதாலெட்சுமி, ஆனந்தராஜ், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் அர. கருத்தப்பாண்டி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், தி.மு.க. நகர செயலாளர் வாள் சுடலை உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 10-ம் திருவிழாவான 26-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
28-ந்தேதி விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
