எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது ; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வை வலியுறுத்தியும் பேச்சுவார்த்தையில் உழியர்களுக்கான குழுவில் அண்ணா தொழிற்சங்கம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நிலைக்குழுவில் அ.தி.மு.க. இடம்பெறவில்லையே
பதில்:- அதிமுக ஒரு மகத்தான இயக்கம். பல லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்ற இயக்கம். இப்படிப்பட்ட பேரியக்கத்தைச் சார்ந்த அண்ணா தொழிற்சங்க பேரவையைச் சேர்க்காமல் வெளியிட்ட அரசாரணையை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கேள்வி:- நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளதா
பதில்:- இது குறித்து அண்ணா தொழிற்சங்க பேரவை முடிவு செய்யும்.
கேள்வி :- வேலை நிறுத்த போராட்டத்திற்கு வாய்ப்பு உள்ளதா
பதில் :- பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது ஒருபக்கம். ஆனால் அதே நேரத்தில் அதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு இந்த விடியா அரசு எங்களைத் தள்ளக்கூடாது. தொடர்ந்து இதுபோன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் கட்சி எடுக்கும் முடிவு குறித்து நாங்கள் தெரிவிப்போம்
கேள்வி :- செஸ் போட்டிக்கான செலவுகளை வெளிப்படையாகக் காட்டத் தயார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளாரே
பதில் :- நாங்கள் தெற்காசிய விளையாட்டுப் போட்டியை நடத்தினோம். ஏதாவது சிறிய பிரச்சினை இருந்ததா.அன்றைக்குப் பிரதமர் நரசிம்மராவை அழைத்துவந்து நடத்தினோம். நான் அன்றைக்கு அமைச்சராக இருந்தேன். ஒரு சிறிய பிரச்சனைக்கூட இல்லை. இதுபோன்ற எந்த கருத்தும் வரவில்லை. ஆனால் 2006 -11 ல் செம்மொழி மாநாட்டை நடத்தினார்கள். அப்போதும் இதே பிரச்சனைதானே வந்தது.
செம்மொழி மாநாட்டிற்கு 400 கோடிக்கு மேல் செலவு செய்தார்கள் என்று சொன்னார்களே.அந்த கணக்கு எல்லாம் எங்கே போனது. இன்றைக்கு ஒரு குற்றச்சாட்டுப் பத்திரிக்கையில், ஊடகத்தில் வருகிறது. ஒரு ஒட்டலுக்கு 10 நாட்களில் 30 கோடி செலவு என்றால் அதற்கு ஒரு ஓட்டலைக் கட்டிவிடலாமே. சாப்பாடு செலவு இல்லாமல் ஒட்டலுக்கு 30 கோடி பில் என்றால் இது குறித்து ஒரு சந்தேகத்தை மக்கள் எழுப்புகிறார்கள். பத்திரிக்கையில், சமூக ஊடகத்தில் சந்தேகத்தை எழுப்புகிறார்கள் என்றால் அதனை தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை. தெளிவுப்படுத்த வேண்டியதுதான் அமைச்சரின் கடமை. இதற்கு ஏன் எங்கப்பன் குதிரைக்குள் இல்லை என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறீர்கள். அப்படி என்றால் ஏதோ இருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றும்.
கேள்வி :- அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளாரே
பதில் :- அவர் பேரவைத் தலைவர் பணியை ஒழுங்காகச் செய்யட்டும். கட்டப்பஞ்சாயத்து வேலையைப் பார்க்கவேண்டாம். அவர் இதனை ஏன் தெரிவிக்கிறார்.பேரவைத் தலைவர் வேலையை செய்கிறரா.அல்லது கட்சி வேலையை செய்கிறாரா? இதுபோன்ற கருத்தைக் கட்சியினர் தெரிவிக்கலாம். பேரவைத் தலைவரின் மாண்பை இன்றைக்கு சிதைத்துள்ளார். நானும் பேரவை தலைவராக இருந்துள்ளேன்.என்ன விதிகளில் உள்ளதோ அதன்படிதான் செயல்பட்டேன்.அதனைத் தாண்டி நான் சென்றதில்லை. அவருக்குக் கட்ட பஞ்சாயத்து ராஜா என்று துறு துறு என்று இருக்கிறது.
கேள்வி :- ஆளுநர் விருந்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாததற்கு என்ன காரணம்.
பதில் :- கலந்துகொள்ளவேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் பந்திக்கு முந்தி, படைக்குப் பிந்தி என்று ஓ.பன்னீர்செல்வம் குழு சென்றுள்ளது. இதுபோன்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஆயிரம் பேரை திரட்ட சொல்லுங்கள் பார்க்கலாம். நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்று சொல்லிக்கொண்டு இன்றைக்கு உங்களுடைய சுயரூபம் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரிகிறது. யார் அழைத்தாலும் விடிய,விடிய பாய் போட்டு படுத்துக்கொள்வார்கள்.
கேள்வி :- அவர்களுக்கு ( ஓ.பன்னீர்செல்வத்திற்கு) ஏன் இந்த அவசரம் என்று நினைக்கிறீர்கள்
பதில் :- அவரிடம் எந்த அதிகாரமும் கிடையாது, கட்சியிலும் அவர் கிடையாது. யாராவது ஒருவர் அழைக்கமாட்டார்களா என்று முந்திக்கொண்டு பாய் போட்டுப் படுத்துவிடுவதுதான் அவர் வேலை.
கேள்வி :- அ.ம.மு.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க. குறித்து பல்வேறு கருத்துக்களை தினகரன் தெரிவித்துள்ளாரே
பதில் : அவர் எங்கள் இயக்கத்தைப் பற்றிப் பேச எந்த முகாந்திரமும் இல்லை. எங்களால்தான் அவர்கள் தோற்றார்கள் என்று சொல்கிறார்.இரட்டை இலை என்ற உப்பைத் தின்று, புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தால்,அம்மா கட்டிக்காத்த இயக்கத்தால் உண்டு கொழுத்தவர்கள் இன்று அ.தி.மு.க.வை விமர்சனம் செய்வது என்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எங்கள் கட்சியை பொறுத்தவரையில் இன்று எழுச்சியோடு உள்ளது. கட்சியின் எழுச்சியை பொறுக்க முடியாமல் ,கடந்த காலங்களில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்று, அம்மாவின் அரசு வந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் பல சதிகளை செய்தது அனைத்தும் இன்றைக்கு தொண்டர்களுக்குத் தெரியும். எந்த பசப்பு வார்த்தைகள் சொன்னாலும் அது ஒருபோதும் எடுபடப்போவதில்லை.
கேள்வி :- எங்களிடம் 80 சதவீத அ.தி.மு.க.வினர் உள்ளனர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாரே
பதில் :- மொத்தம் 80 பேர்தான் உள்ளார்கள். உள்ளங்கை நெல்லிக்கனிபோல உலகத்திற்கே தெரியும். மாபெரும் சக்தி யார் என்று. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இன்றைக்கு வீடு நடைபோட்டுவருகிறது. உள்ளங்கை நெல்லிக்கனிபோல தெரிகிறது.
கேள்வி :- டிடிவி தினகரன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளததாகவும்,அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும்
பதில் :- நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.சசிகலா,டிடிவி ஆகியோரை எந்த நிலையிலும் சேர்த்துக் கொள்வதாக இல்லை. சசிகலா,டிடிவி தினகரன்,ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் யாரிடம் கூட்டுச் சேர்கிறார்களோ அவர்களிடத்தில்தான் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கவேண்டும். தேர்தல் வரட்டும்.அந்த நிலைப்பாட்டை அவர் எடுக்கட்டும்.எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் எடுப்போம்.
கேள்வி : அதிமுக ஆட்சி இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததை விமர்சனம் செய்த தி.மு.க,தற்போது எதற்கெடுத்தாலும் பிரதமரைச் சென்று சந்திப்பது,இணக்கமாக இருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்
பதில்:- முதல்வர் ஸ்டாலின் பிரதமரை சந்திப்பது என்பது நிச்சயமாக மாநிலத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்காது. வெளியில் எங்களைப் போன்று மத்திய அரசை எதிர்க்க ஆள் இல்லை என்று பேசுவார்கள். மாநில சுயாட்சி குறித்துப் பேச எங்களைப்போல வேறு யாரும் இல்லை என்று பேசுவார்கள். எங்களைப் போல மாநில உரிமைக்குப் போராடுபவர்கள் யாரும் கிடையாது என்பார்கள்.ஆனால் அத்தனை உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டார்கள். மத்தியில் மண்டியிடுகின்ற வேலையைத்தான் ஆளும் விடியா தி.மு.க. அரசு செய்துவருகிறது. மண்டியிடும் வேலையின் தொடர்ச்சியாகத்தான் இன்று அவர் டெல்லி சென்றுள்ளார்.இதனால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் விளையப்போவதில்லை.
தமிழகத்திற்கு எவ்வளவு நிதியை எடப்பாடி பழனிசாமி பெற்றுத் தந்தார் என்று எங்களால் சொல்ல முடியும். அம்மா முதல்வராக இருக்கும்போது தமிழகத்திற்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்று எங்களால் பட்டியலிட முடியும். ஆனால் இவர்கள் சென்று பார்க்கிறார்கள்.இதனால் என்ன பயன் கிடைத்தது. தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளைக் கட்டிக் காக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? இவர்கள் மண்டியிடும் வேலையைத்தான் செய்வார்கள்.ஸ்டாலின் பிரதமரைச் சந்திப்பு என்பதால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடையாது. வேறு வகையான சந்திப்புகளுக்கு அது காரணமாக இருக்கலாம்.
கேள்வி:- ஆளும்கட்சி மீது எதிர்க்கட்சி விமர்சனம் செய்யும்போது அதனை அமைச்சர்கள் விமர்சனம் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள்
பதில் :- எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும்போது அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அண்ணா குறிப்பிட்டதுபோல ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கப் அண்டு சாசர் போல. எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லவேண்டும். ஆனால் ஏளனப்படுத்துவது, ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளைச் சொல்வது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்கள். அவர்கள் எந்த வார்த்தையைப் பேசினாலும் அதனைவிட 10 மடங்கு வார்த்தைகளைப் பேச எங்களுக்குத் தெரியும்.
கேள்வி :- பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையை இழந்துவீட்டீர்களா.
பதில் :- அதற்குள் நான் போகவில்லை.பேரவைத் தலைவருக்கு என்று ஒரு மாண்பு உள்ளது.அதன்படிதான் செயல்பட முடியும். கடிதம் வந்துள்ளது.இது குறித்து நாங்கள் ஆலோசனை செய்துவருகிறோம் என்று தெரிவித்தால் பரவாயில்லை. இவர் யார் கட்டபஞ்சாயத்து செய்வதற்கு?
கேள்வி :- நீங்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஏன் அவர் ( பேரவைத் தலைவர்) விரும்புகிறார்.இதற்குப் பின்புலமாக தி.மு.க உள்ளது என்று நினைக்கிறீர்களா
பதில் : நாங்கள் கோவிலாக மதிக்கக்கூடிய எம்.ஜி.ஆர். மாளிகையை காலால் எட்டி உடைத்து ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில்தானே எடுத்து சென்றார்கள். இவை அனைத்தும் காவல்துறையினரின் துணை இல்லாமல் நடக்குமா. பின்புலம் தி.மு.க., ஓ.பன்னீர்செல்வத்தை முடுக்கிவிட்டுள்ளார்கள். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க. என்ன சொல்கிறதோ அதனைச் செய்வார்.
கேள்வி :- சட்டமன்றத்தில் அவரின் ( ஓ.பன்னீர்செல்வம் ) பதவி பறிக்கப்படும் என்று நம்புகிறீர்களா’
பதில் : கட்சியை விட்டு நீங்கினால் அவர் சுயேச்சை என்று விதிகளில் தெளிவாக உள்ளது. அவர் சுயேச்சை எம்.எல்.ஏ.தான்.இதைதான் அவர் ( பேரவைத் தலைவர் ) செய்யவேண்டும். உண்மையில் இதனை அவர் செய்தால் மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று சொல்லலாம். செய்யவில்லை என்றால் மாண்பு இல்லாத பேரவைத்தலைவர் என்றுதான் நிச்சயமாக சொல்ல முடியும்.
கேள்வி :- அரும்பாக்கம் வங்கி கொள்ளை சம்பவத்தில் குற்றவாளியே காவல்நிலையத்தில் சரண் அடைந்த நிலையில் நாங்கள்தான் கைது செய்தோம் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளாரே
பதில் :- காவல்துறை அம்மாவின் ஆட்சியில் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது. எந்த வகையிலும் தலையீடு கிடையாது. அவரை பொறுத்தவரையில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுத்தார். சட்டத்தின் ஆட்சியை அம்மா நடத்தினார்.இதனால் காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டது. ஆனால் இப்போது காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன., எதிர்க்கட்சியினர் மீது காவல்துறையை ஏவி அவர்கள் மீது பொய்வழக்குப் போட்டு பழி வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் தற்போது தமிழகத்தில் கொலை,.கொள்ளை என்பது தினமும் நடந்துவருகிறது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
