• June 7, 2025

தபால்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம்; சி.ஐ.டி.யு.ஆதரவு

 தபால்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை வேலைநிறுத்த போராட்டம்; சி.ஐ.டி.யு.ஆதரவு

தபால்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை 1௦-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது,இதற்கு சி.ஐ.டி.யு. ஆதரவு தெரிவித்து இருக்கிறது,
இது தொடர்பாக சி.ஐ.டி.யு.தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன், பொதுசெயலாளர் சுகுமாறன் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசின் சேவை துறைகளில் ஒன்றான தபால்துறை நாட்டின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையில் உள்ள குக்கிராமங்களுக்கும் மிக குறைந்த கட்டணத்தில் தபால் சேவை, பண பரிமாற்றம், சிறு சேமிப்பு என பல்வகை பணிகளை செய்து வருகிறது. இந்த துறையையும் மத்திய மோடி அரசு விட்டு வைக்க விரும்பவில்லை.
ஏற்கனவே பணமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா, பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்கள், ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களையும் , வங்கி, காப்பீடு, நிதி போன்ற நிறுவனங்கக்ளையும் தனியார் மயமாக்கிய மோடி அரசு, தபால் துறையிலும் கார்ப்பரேட்டுக்கள், தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தொழில் செய்வது அரசின் வேலையில்லை என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் பொருள் பொதுத்துறை நிறுவனங்களால் தொழில் வளர்ச்சி, பொருளாதார உயர்வு மற்றும் வேலைவாய்ப்பு , தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டின் சமூகநீதி காப்பது போன்ற அரும்பணிகளை மோடி அரசு புறந்தள்ளுகிறது.
நாட்டின் சொத்துகளை விற்று அதன்மூலம் கிடைக்கும் நிதியை ஊக்குவிப்பு என்ற பெயரில் இந்திய பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வாரி கொடுக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது.
தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து இத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் ஓரணியில் நின்று ஆகஸ்டு 1௦ ந்தேதி (நாளை) நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
நாட்டின் சொத்தையும், பாமர மக்களுக்கு பெரும் சேவை புரியும் தபால் துறையையும், பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க நடைபெறும் இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு சி,ஐ.டி.யு.தமிழ்நாடு மாநிலக்குழு முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறது.
போராடும் தபால் துறை ஊழியர்களுக்கான ஆதரவு நடவடிக்கையில் ஈடுபடுமாறு சி.ஐ.டி.யு.அமைப்புகளை கேட்டுகொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *