கோவில் விழாவில் பாம்பு வித்தை காட்டியவர் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த 7-ந்தேதி காளியம்மன் கோவில் கோடை விழா நடந்தது. இவ்விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நிகழ்ச்சியில் பாம்பு பிடி வீரர் மூலம் நல்ல பாம்பு வித்தையும் காண்பிக்கப்பட்டது. இந்த நல்ல பாம்பு வித்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் கோவில் திருவிழாவில் நல்லபாம்பு மூலம் வித்தை காட்டிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வன அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி தூத்துக்குடி வன சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் ஓட்டப்பிடாரம் வனவர் மகேஷ், வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வனக்காவலர் லட்சுமணன் ஆகியோர் கோவில் திருவிழா நடந்த எஸ்.குமரபுரம் கிராமத்திற்கு சென்று கோவில் கமிட்டி நிர்வாகிகளிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் பாம்பு வித்தை காட்டிய மதுரை ஆளவந்தன் பகுதி சார்ந்த பாம்பாட்டி ராஜேஷ்குமார் (வயது 46) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று பாம்பாட்டி ராஜேஷ்குமாரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரை பேரூரணி சிறையில் அடைத்தனர்.