பெண்கள் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டாம்; கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் தற்போது 449 பெண் பயிற்சி போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி போலீசாருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேஷியஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்கள் சமூக வலைதளங்களை மிக கவனமுடன் கையாள வேண்டும். தேவையில்லாமல் தங்களது புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற கூடாது. அதன் மூலம் உங்கள் புகைப்படங்கள் திருடப்பட்டு குற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத செயலிகள் மேலும், ஆன்லைனில் வரும் லிங்குகள் மூலம் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் உங்களது சுயவிவரங்கள் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் திருடப்பட்டு உங்கள் பணம் மோசடி நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் வங்கி அலுவலர் போல் பேசி உங்களது ஏ.டி.எம் கார்டு விவரங்களை கேட்டறிந்து அதன் மூலம் உங்கள் பணம் மோசடி செய்யப்படலாம். சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது எப்போதும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகரன், அச்சுதன், போலீஸ் பயிற்சி பள்ளி முதன்மை சட்ட போதகர் இன்ஸ்பெக்டர் ஜான்டஸ் பாபுனி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பச்சமால், ஜேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
