அ.தி,மு.க.அலுவலகத்துக்கு `சீல்’வைப்பு

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் வலுத்தவுடன் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யார் அந்த ஒற்றையர் என்ற கேள்வி எழுந்தது.
பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தது. இதனால் பொதுக்குழுவை கூட்ட ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார், மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது
வழக்கு விசாரணையின் பொது பொதுக்குழு கூட்டத்துக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து இன்று காலை அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் நடந்தன. ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பொதுக்குழுவில் ஏற்கனவே பொதுகுழுவில் நிறைவேற்றப்பட்டிருந்த ஜெயலலிதா வகித்த பொதுசெயலாளர் பொறுப்பிற்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கபடவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து தற்காலிக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வாழத்து தெரிவித்து கழக மூத்த தலைவர்கள் பேசினார்கள். தொடர்ந்து 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக கே.பி.முனுசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டவேண்டும் என்று பொதுகுழு உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கட்சி அலுவலகத்துக்கு சென்றார். பூட்டிக்கிடந்த அலுவலக கதவுகள் உடைக்கப்பட்டன. கட்சி அலுவலகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.
இரு பிரிவினர் மோதலை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர். அத்துமீறி கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது போலீசில் அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கபட்டது.
இதற்கிடையே கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மூடி `சீல்’ வைக்கப்பட்டது. ‘வருவாய் கோட்டாட்சியர், ஓ.பன்னீர்செல்வத்திடம் சீல் வைப்பதற்கான நோட்டீசை வழங்கிய பின்னர், தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்டதற்கான நோட்டீசும் கதவில் ஒட்டப்பட்டது. மேலும் அ.தி.மு.க. கட்சி அலவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மீண்டும் 199௦ நிலை
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. ஜானகி அம்மாள் தலைமையில் ஓரு அணியும், ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும் செயல்பட தொடங்கியது. 1989 தேர்தலை ஜா. அணி மற்றும் ஜெ.அணி என்று வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் ஜா. அணியில் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஜெ. அணியில் 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். கட்சி அலுவலகத்தையும் மீட்டார்.
பின்னர் 1990 ம் ஆண்டில் அ.தி.மு.க.வில் நெடுஞ்செழியன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு, சாத்தூர் ராமசந்திரன் ஆகியோர் திடீர் எதிர்ப்பு தெரிவித்து பிரிந்து சென்றனர். இதன் காரணமாக நால்வர் அணி உருவானது, அவர்கள் தனி கட்சி அலுவலகம் திறந்து அரசியலை நடத்த தொடங்கினர்.
இந்த நிலையில் திருநாவுக்கரசு, சாத்தூர் ராமசந்திரன் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்துக்கு சென்று வாக்குவாதம் செய்தனர். அப்போது இரு தரப்பினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது. மோதல் ஏற்படும் நிலை உருவானது.
அப்போது முதல் அமைச்சராக இருந்த கருணாநிதி உடனடியாக போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். போலீசார் அசம்பாவிதத்தை தவிர்க்க கட்சி அலுவலகத்தை மூடி சீல் வைத்தனர். அதன்பிறகு 4 மாதங்கள் கழித்து உண்மையான் அ.தி.மு.க..நாங்கள் தான் என்று நிரூபித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
