அ.தி.மு.க. பொதுக்குழு கூடியது; இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து சென்னை வானகரத்தில் இன்று திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடியது.
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். சென்னை பசுமைவழி சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 6.45 மணியளவில் பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். கடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை வாகனத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு சென்றார். வீட்டில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் பயணித்த வாகனம் மீது பூக்களை தூவி வரவேற்றனர்.

பொதுக்குழுகூடிய வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. முக்கிய தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறிய கருத்துக்கள் பின்வறுமாறு:-
திண்டுக்கல் சீனிவாசன்:- பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அளிக்கும் தீர்ப்பை மதித்து நடப்போம்.
ஓ.எஸ். மணியன்:- உண்மையாக வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்குழு இது தான். தலைவர்கள், பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நடைபெற்ற கூட்டம் இப்போது அ.தி.மு.க.வின் ஒரு தொண்டர் பொதுச்செயலாளர் ஆகிறார் என்பது தான் இந்த கூட்டத்தின் வரலாற்று சிறப்பு.
மைத்ரேயன்:- இன்று நடைபெறும் கழக பொதுக்குழு வரலாற்று சிறப்பு வாய்ந்த பொதுக்குழு. இன்றைய பொதுக்குழுவிலே அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு உறுப்பினர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்.
வைகைச்செல்வன்:- இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஒற்றை தலைமை குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இன்னும் பல்வேறு அம்சங்கள் இன்றைய பொதுக்குழுவில் உள்ளன.
டி.ஜெயக்குமார்:- இது எழுச்சியான பொதுக்குழு. ஆரவாரமிக்க பொதுக்குழு. வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு காலையில் குறிபிட்ட நேரத்தில் கூடியது. பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கபட்டனர். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்ப்பட உள்ளன.
தற்போது கட்சி மூத்த தலைவர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கடுமையாக தாக்கி பேசினார்கள்.
இதற்கிடையே எடப்பாடி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.
