அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் மோதல்- கதவுகள் உடைப்பு; போலீஸ் தடியடி

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஓ.பன்ன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சென்றார். அந்த சமயத்தில் தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.
அங்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூடி இருந்தனர், அப்போது அங்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பு ஆதரவாளர்களும் கல்வீச்சில் ஈடுபட்டனர். மேலும், அ.தி.மு.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமி படங்கள் இருந்த பதாகைகளுக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தீ வைத்து அவருக்கு எதிராக கோஷமிட்டனர். கல்வீச்சு சம்பவத்தில் இதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பின்வாங்கியதை அடுத்து, பூட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார். இதனால் பரபரப்பான் சூழல் நிலவி வருகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டதால் கலவரமயமானது. அங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மோதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

பின்னர், தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதையடுத்து, அதிமுக அலுவலகத்தில் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, அதிரடிப்படி போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, மோதலில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கு திரண்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும்கைது செய்யப்பட்டனர், மாவட்ட செயலாளர் வி.என்.ரவி. உள்பட பலரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-
கடந்த பொதுக் குழு கூட்டத்தின் போது அடுத்த பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது . இதை ஏற்றுக் கொண்டுதான் ஓ.பன்னீர் செல்வம் சென்றார். ஆனால் இந்த பொதுக்குழுவிற்கு தடை வாங்க நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினார் .
நீதிமன்றம் பொதுக்குழுவில் கலந்து கொண்டு உங்களின் கருத்துகளை தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறிய பிறகும் ஓ.பன்னீர் செல்வம் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சசத்தில் இருக்கிறார். அவரின் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார். நிச்சயம் கட்சி அவரை கண்டிக்கும். இதற்கு மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு முடிவு செய்வார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
