`கொடிய ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம்’-போலீஸ் முன்னிலையில் பொதுமக்கள் உறுதிமொழி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி கிழக்கு மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா தலைமையிலான போலீசார் வேலாயுதபுரம் பகுதியில் பொதுமக்களிடமும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பஞ்சவர்ணம் தலைமையிலான போலீசார் மார்தாண்டப்பட்டி பகுதியில் பொதுமக்களிடமும் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.’

கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மேற்படி காவல்துறையினரின் முன்னிலையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம்.
எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம்.
எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்
இந்த உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
