கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் பூங்கா திறப்பு; 200க்கும் மேற்பட்ட மரங்கள் பராமரிப்பு

தென்மாவட்டங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களும் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன, ஒவ்வொரு ரெயிலிலும் கோவில்பட்டி பயணிகள் பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் இந்த ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.
கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் ரோட்டரி சங்கமும், நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படையும் இணைந்து 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு தேசிய பசுமைப்படை மாணவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ரோட்டரி சங்கம் சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு ரூ. 60 ஆயிரம் செலவில் பாதுகாப்பு வேலியுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்டத் துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு, ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயக ரமேஷ், நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன், பொருளாளர் அய்யப்பன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர் இதயம் முத்து அண்ணாச்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாதுகாப்பு வேலியுடன் கூடிய பூங்காவை திறந்து வைத்தார். பூங்காவை தொடர்ந்து பராமரித்து வரும் நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் குருசாமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நாராயணசாமி, முத்துச்செல்வன், பரமேஸ்வரன், கருப்பசாமி, ரெயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் சந்திரன், ரெயில்வே சுகாதார ஆய்வாளர் குருநாத், ரெயில் நிலைய மேற்பார்வை அலுவலர் பாலமுருகன், நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.
