தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டியில் பா.ஜனதா உண்ணாவிரத போராட்டம்

சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகர் மற்றும் முக்கிய நகரங்களில் பா.ஜனதா சார்பில் உன்னாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்ல் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்காக பஸ்நிலையம் அருகே சாலையோரம் பந்தல் அமைத்து அதனுள் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்துக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் தினேஷ் ரோஹி, மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க.அரசை கண்டித்து பேசினார்கள். உண்ணாவிரதத்தில் மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணகுமார், சரவண கிருஷ்ணன், வேல்ராஜன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.
உண்ணாவிரத போராட்டம் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
