கோவில்பட்டி பஸ் நிலையத்தில் 30 தற்காலிக கடைகள் அகற்றம்; கூரை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு நாள் `கெடு’
கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த பஸ் நிலையம் பயணிகளின் வசதி பற்றி கண்டுகொள்ளாமல் வியாபார கடைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகராட்சி வருமானத்துக்கு வழிவகுத்து உருவாக்கப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.
வணிக வளாகம் போல் நிறைய கடைகள், அலுவலகங்கள், கிளினிக்குகள் பஸ் நிலைய வளாகத்தில் உள்ளன. இது தவிர தற்காலிக கடைகள் பெருகி காணப்பட்டன.
இதன் காரணமாக பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நிறுத்துவதற்கு கூட இடம் கிடைக்காது. இதனால் பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ்களை நிறுத்து பயணிகளை இறக்கி விடுவதும் உண்டு, இதன் காரணமாக வெளிப்புறம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். பஸ் நிலையத்தின் உள்பகுதி எப்போதும் நெருக்கடியில் காட்சி அளிக்கும். பயணிகள் நிற்பதற்கு கூட இடம் கிடைக்காமல் அல்லல்பட்டு வருகிறார்கள்.
இந்த அவல நிலை பற்றி ஒரு மாதத்துக்கு முன்பு www.tn96news.com படத்துடன் இணையத்தில் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை)காலை
அண்ணா பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் தலைமையில் நடந்தது. கோவில்பட்டி தாசில்தார் சுசிலா, சுகாதார அதிகாரி நாராயணன், வருவாய் ஆய்வாளர் பிரேம்குமார் சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், வள்ளிராஜ், மேற்பார்வையாளர்கள் கனி, முருகேசன், விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதாரப் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்,
பயணிகள் மற்றும் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த 30 தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன. மேலும் நகராட்சி வாடகை கடைகளில் கான்கிரீட் தூண்கள் அமைத்து, ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகர கூரைகள் வைத்துள்ள ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள், தாங்களாகவே அகற்றிக் கொள்வதற்கு அவகாசம் கேட்டனர்.
இதை ஏற்று அவற்றை அகற்றுவதற்கு ஆணையாளர் ஒருநாள் மட்டும் அவகாசம் கொடுத்தார். அதன்படி நாளைக்குள் (சனிக்கிழமை) ஆக்கிரமிப்பு ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் தகர கூரைகள் அகற்றப்படாவிட்டால் நகராட்சி பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபடுவார்கள்.
நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றியவுடன் மறுபடியும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.