கோவில்பட்டியில் கஞ்சா வேட்டை; 14 வழக்குகளில் தொடர்புடையவர் கைது
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று (22.6.2022) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முத்துகுமார் (வயது 28) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே முத்துகுமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட முத்துகுமார்; மீது ஏற்கனவே கோவில்பட்டி மேற்கு, கோவில்பட்டி கிழக்கு மற்றும் கயத்தாறு ஆகிய காவல் நிலையங்களில் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.