அ.தி.மு.க. பொதுக்குழுவை புறக்கணிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு?
![அ.தி.மு.க. பொதுக்குழுவை புறக்கணிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு?](https://tn96news.com/wp-content/uploads/2022/06/download-11-2.jpg)
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நேற்று ஒ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், தர்மர் ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், காமராஜ், வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.
அதே சமயம் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி 23ந் தேதி நடத்த வேண்டும் என்று 2300 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளதாகவும், பொதுக்குழுவை நடத்தவும், அதில் தவறாமல் கலந்து கொள்வோம் என உறுதி அளித்தும் எழுத்துப்பூர்வமாக கையெழுத்திட்டு மாவட்டசெயலாளர்கள் மூலம் கடிதத்தை எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூடி ஒற்றைத் தலைமை குறித்து தனித் தீர்மானம் கொண்டு வரும் பட்சத்தில் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)