பெண் கொலை: 2 குழந்தைகளுடன் தலைமறைவான கணவர் எங்கே? தேடுதல் வேட்டை தீவிரம்

கொலை செய்யப்பட்ட கார்த்திகா
கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகா (24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று தங்கராஜின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
இதனால் அவர்கள் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுஜித், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கார்த்திகா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடலில் காயங்களும் தென்பட்டது. இதையடுத்து போலீசார், கார்த்திகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி போலீசார் விசாரணையை நடத்தினர். அப்போது கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தங்கராஜ், கார்த்திகாவை அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்றும், இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகி இருக்கலாம் என்றும் தெரிய வந்தது. கார்த்திகா கொலையை தொடர்ந்து தங்கராஜ் தனது 2 குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்துள்ளது. தங்கராஜ் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழு காரணம் தெரியவரும்.
கார்த்திகா கொலை பற்றி அறிந்ததும் தூத்துக்குடியில் வசிக்கும் அவரது பெற்றோர் பொன்னுச்சாமி, லதா ஆகியோர் கோவில்பட்டிக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் லதா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கராஜை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
