கல்லூரி மாணவியை தலையில் கல்லை போட்டு கொன்றவர் சிக்கினார்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி மேலவீதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் ரோஜா (வயது 19). இவர், ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
ஆத்தூர் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ராமர் மகன் சாமிதுரை. இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். சாமிதுரை கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரை வீட்டுக்கு வந்து சென்ற போது, ரோஜாவை பார்த்துள்ளார். இதன் பின்னர் சாமிதுரை, ரோஜாவை ஒரு தலையாக கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவரது காதலை ரோஜா ஏற்க மறுத்தார்.

கடந்த 7-ந்தேதி இரவு ரோஜா தங்களது தோட்டத்தில் இருந்த போது அங்கு வந்த சாமிதுரை, காதலிக்க வற்புறுத்தவே அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ரோஜாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது ரோஜாவின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது அக்காள் நந்தினி வெளியே வந்து பார்த்த போது சாமிதுரை மற்றும் 2 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதை பார்த்து விட்டார்.
இதையடுத்து கொலையாளியை பிடிக்க ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவந்தனர். இந்நிலையில் கூடமலை அருகே உள்ள சோள காட்டில் பதுங்கியிருந்த சாமிதுரையை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கெங்கவல்லி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
