திற்பரப்பு அருவியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

திற்பரப்பு அருவி- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கி.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இந்த அருவி குமரி குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டு கல்வெட்டு உள்ளது.
தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக வரலாற்று நம்பிக்கை உள்ளது.
கீழ்பகுதி வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.
மேலும் திற்பரப்பு அருவியிலிருந்து 5 கி.மீ தொலைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருநந்திக்கரை குகைக்கோவில்கள் அமைந்துள்ளன.
தற்போது கோடை விடுமுறை என்பதாலும் அருவியில் தண்ணீர் கொட்டுவதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. குடும்பம் குடும்பமாக வந்து அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். மேலும் சிவன் கோவில் மற்றும் குகைகோவில்களை பார்த்து செல்கிறார்கள்.
