திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: சர்ப்ப காவடி, பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 12ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழா 11.6.2022 முதல் 13.6.2022 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
இத்திருவிழாவிற்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.
வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள், மற்றும் கோவில் வளாக சுற்று வட்டாரப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குற்ற செயல்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இத்திருவிழாவிற்கு சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
முருகப்பெருமானுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அக்னி காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, சர்ப்பகாவடி, மச்சக்காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, கரும்புத் தூளி காவடி என பல காவடிகளை பக்தர்கள் சுமக்கின்றனர்.
இதில் சர்ப்பக்காவடி சிறப்பானது. நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும். சர்ப்பக்காவடி எடுப்பவர்கள் 41 நாட்கள் கடும் விரதம் இருப்பார்கள்.
அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பு காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவு வருமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் குறிப்பிட்ட அந்த இன பாம்பை பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு , அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள்.
அது யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடும். இந்த சர்ப்பக் காவடி முன்பெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் நிறையவரும். இப்போது எப்போதாவது அபூர்வமாகத்தான் வருகிறது. இப்படி சர்ப்பக் காவடி எடுப்பது அவரவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
