கோவில்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை: கைது நடவடிக்கை தொடருகிறது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாதவராஜா மற்றும் போலீசார் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி செக்கடி தெருவில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி செக்கடி தெருவை சேர்ந்த சின்னத்தம்பி (34), கே.கே நகர் செல்லபெருமாள் (61),சங்கரலிங்கபுரம் தெய்வேந்திரன் (51) என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியில் இதே போல் ரோந்து சென்ற போலீசாரிடம் புகையிலை பொருட்களுடன் 5 பேர் சிக்கினர். தற்கு முன்னதாக இதே போல் மேலும் சிலர் சிக்கி கைதாகி இருக்கிறார்கள்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும் தொடர்ந்து விற்பனைக்காக புகையிலை பொருட்கள் எப்படியாவது கோவில்பட்டிக்கு வந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு மூல காரணம் யார்? பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
