பணி நிரந்தரம் செய்யக்கோரி தற்காலிக செவிலியர்கள் போராட்டம்

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள், தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை திடீர் போராட்டம் நடத்தினர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக ஏறக்குறைய 5,000-க்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டனர
அவர்களில் 2,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதம் பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில், 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த 7 ஆண்டுகளாக தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா உட்பட பேரிடர் காலத்தில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி முதற்கட்டமாக இன்று, தமிழகம் முழுவதும் செவிலியர்களை பணிநிரந்தம் செய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக திட்டமிட்டனர்.
ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இன்று காலை திடீரென 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். ஆனால் பலன் இல்லை. அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலையில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
