திடீர் தடை: ஓடாத ராட்டினங்களை வேடிக்கை பார்த்து செல்லும் மக்கள்; களை இழந்த சித்திரை திருவிழா



கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா என்பது கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார மக்களுக்கு மறக்க முடியாத திருவிழா ஆகும். பங்குனி மாத இடையில் தொடங்கி சித்திரையில் தேரோட்டம் கண்டு தீர்த்தம் கொண்டாடி தெப்ப திருவிழாவுடன் நிறைவு பெறும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழாவின்போது மக்கள் ஒன்று கூடி தேர் இழுப்பதில் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் களைகட்டும். கோவில் மைதானத்தில் ராட்டினங்களில் ஏறி மகிழும் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமின்றி பெரியவர் களும் அடங்குவர்.
பல வருடங்களுக்கு முன்பெல்லாம் சாதாரண மரத்திலான ராட்டினம் தான் இருக்கும். ஒரு அடுக்கில் 2 பேர் அமரலாம். மேலும் கீழும் சுற்றி வரும் போது ஏற்படும் குதூகலம் என்றும் மறையாது. மேலும் குதிரை ராட்டினம் இருக்கும். குதிரை மீது அமர்ந்து கொண்டால் வேகாமாக சுற்றி விடுவார்கள். அதில் பயணிப்பது என்றால் கெத்தாக இருக்கும்.
தற்போது 60 வயதை கடந்தவர்கள், சிறுவர்களாக இருக்கும் போது தேரோட்டம் மாலையில்தான் நடக்கும். நண்பர்கள் படை சூழ தேரோட்டம் பார்த்து விட்டு அங்கு விற்கப்படும் தின் பண்டங்கள் வாங்கி சாப்பிடுவதுடன் இரவு டிபனை ஓட்டலில் முடித்து விட்டு நள்ளிரவில் தான் வீட்டுக்கு செல்வார்கள்.
கடைவீதிகளில் மட்டுமின்றி மெயின்ரோடு பகுதிகளிலும் கூட்டம் அலைமோதும். ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வளவு குதூகலமாக கொண்டாடப்பட்ட சித்திரை திருவிழாவில் தேரோட்டமானது நாளடைவில் காலை நேரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அன்றில் இருந்தே தேரோட்டத்தின் மவுசு குறைந்து விட்டது என்றே சொல்லலாம். கொளுத்தும் வெயிலுக்கு பயந்து நிறைய பேர் நேரில் தேரோட்டம் காண்பதை மறக்க தொடங்கி விட்டனர். டெலிவிஷன் நேரலையில் பார்க்க தொடங்கி விட்டார்கள்.
நவீன உலகில் ராட்டினங்கள் நவீனமாகி விட்டன. மின்னல் வேகத்தில் சுற்றும் ராட்டினங்கள் சமீப காலமாக வரத்தொடங்கி விட்டன. இந்த ராட்டினங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதனால் மாலை நேரங்களில் குடும்பம் குடும்பமாக கோவில் மைதானத்தில் குவிய தொடங்கினார்கள்.
கோவிலில் சாமி கும்பிடுவது, ராட்டினங்களில் சவாரி செய்வது, திடீர் கடைகளில் விற்கப்படும் தின் பண்டங்களை வாங்கி சுவைப்பது என பொழுதை கழித்து வருகிறார்கள். நண்பர்கள் உறவினர்களுடன் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.
திருவிழா தொடங்கி இரண்டு நாட்கள் கழித்து தான் ராட்டினங்கள் ஓடத்தொடங்கின. கடந்த ஆண்டு டெண்டர் எடுத்தவர்தான் இந்த ஆண்டும் டெண்டர் எடுத்தார். இரண்டு நாட்கள் மட்டுமே ராட்டினங்கள் முழுமையாக ஓடின.

மூன்றாவது நாள் தேரோட்டத்தன்று மாலை 6 மணிக்கு ராட்டினங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது. முறையான அனுமதி பெறவில்லை என்றும் சரியான முறையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என்றும் கூறி தடை விதித்தனர்.
ஒரு நாள் ,முன்பாக விருதுநகரில் தனியார் பள்ளியில் நடந்த பொருட்காட்சியில் இயக்கபட்ட ராட்டினத்தில் இருந்து ஒரு இளம்பெண் தவறி கீழே விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் எதிரொலியாகவும் இந்த தடை இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
ராட்டினங்கள் இயக்குவதற்கு இந்து சமய அறநிலைய துறைக்கு பணம் கொடுத்து இருப்பதாகவும், ராட்டினங்கள் கொண்டு வந்து பொருத்தியது, சம்பள ஆட்கள் என மொத்தம் ரூ.1 கோடி வரை செலவாகி விட்டதாகவும் டெண்டர் எடுத்தவர் வேதனை தெரிவித்தார்.
சித்திரை திருவிழாவின் கடைசி3 நாட்கள் கூட்டம் கடல் அலை என குவிந்து இருப்பார்கள். ஆனால் ராட்டினங்கள் இயக்க தடை விதித்ததன் காரணமாக அந்த பகுதி இருள் சூழ்ந்து களை இழந்து விட்டது. ,மீண்டும் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ராட்டினங்கள் இன்னும் கழற்றப்படாமல் வைத்து இருக்கிறார்கள். திருவிழா முடிந்தபிறகும் கூடுதலாக 20 நாட்கள் ராட்டினங்கள் இயங்கும்.
முக்கிய இடங்களில் வழக்கமாக பாட்டுக் கச்சேரி களை கட்டும். கூட்ட நெரிசலில் காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பார்கள். இந்த ஆண்டு அதற்கு இடம் அளிக்காத வகையில் கூட்டம் குறைந்து போய் விட்டது
மேலும் இந்த ஆண்டு பெய்த சிறு சிறு மழை, கூட்டத்தினரை பயம் காட்டி களைய வைத்தது. பாட்டுக் கச்சேரியும் அரசின் விதிமுறை என்ற பெயரில் பல இடங்களில் நடைபெறவில்லை. நடைபெற்ற இடத்திலும் நெருக்கடி காரணமாகவும் மழையாலும் கூட்டமில்லை
மொத்தத்தில் கோவில்பட்டி சித்திரை திருவிழா களை இழந்ததற்கு காரணம் யார் ? என்ற கேள்விக்கு மக்கள் விடை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

