தேசிய ஜனநாயக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம் நீடிப்பார்கள்; பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை சமீபத்தில் மாற்றப்பட்டார். கட்சியின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலைக்கு தற்போது தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 9 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,. அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஏதுவாக அண்ணாமலை மாற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2026 சட்டமன்ற தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் சீட் ஒதுக்குவது தொடர்பாக அதிமுகவுடன் ஆலோசனை செய்து ஒருங்கிணைந்து முடிவு செய்யப்படும். சீட் பங்கீடு குறித்து எங்கள் கட்சியின் ஆட்சி மன்றக்குழுதான் முடிவு செய்யும்.
சீட் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவும் குழு அமைக்கும். ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணியுடன் உறுதியாக நின்றார்கள். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்கள் தொடர்ந்து கூட்டணியில் நீடிப்பார்கள்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.


