• June 8, 2025

குமரி அனந்தன் காலமானார்; கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

 குமரி அனந்தன் காலமானார்; கவர்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93). இலக்கியவாதியான இவர் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12.15 மணி அளவில்  குமரி அனந்தனின் உயிர் பிரிந்தது. 

குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. 

அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது தந்தையை இழந்து மனமுடைந்து அழுத தமிழிசை சவுந்தரராஜனின் கைகளைப் பிடித்து முதல்-அமைச்சர் ஆறுதல் கூறி தேற்றினார்.

சென்னை சாலிகிராமத்திற்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி குமரி அனந்தன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆறுதல் கூறினார்.

குமரி அனந்தன் உடலுக்கு அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் ,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. கனிமொழி, நடிகர் சரத்குமார்  ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

குமரிஅனந்தன் தனது கடைசி விருப்பமாக தனது பெற்றோரை அடக்கம் செய்த இடத்தில் தன்னையும் அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந் தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.

மறைந்த குமரி அனந்தனுக்கு , 2024ம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் விருது வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19, 1933-ல் பிறந்தவர் குமரி அனந்தன். சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன் மற்றும் தங்கம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்த இவரது இயற்பெயர் அனந்தகிருஷ்ணன். இதுவே பின்னாட்களில் குமரி அனந்தன் என்றானது. தமிழ்மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார்

கிருஷ்ணகுமாரி என்பவரை துணைவியாகக் கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் தமிழிசை சவுந்தரராஜன், இன்று டாக்டர், அரசியல்வாதி, தெலுங்கானா கவர்னர், புதுச்சேரி துணைநிலை கவர்னர் என பன்முகத் தன்மை கொண்டு பணியாற்றி வருகிறார்

‘இலக்கியச் செல்வர்’ என்று புகழப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளார். 

பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளும் இவர் மேற்கொண்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *