தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு மழை தொடரும்

தமிழ்நாட்டில் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. கடந்த 3-ந்தேதி முதல் 2-வது சுற்று கோடை மழை பெய்து வரும் சூழலில், இடையில் சிறிய இடைவெளிவிட்டு, பின்னர் 3-வது சுற்று கோடை மழை தொடங்குவதற்கான வாய்ப்பு உண்டாக இருக்கிறது.
அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. இது மிக மெதுவாக நகர்ந்து தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது நாளை இரவுக்குள்) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (8-ந்தேதி) முதல் மேலும் ஒரு வாரத்துக்கு மழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கோடை மழை தொடங்கியதில் இருந்து இதுவரை 188 சதவீதம் இயல்பைவிட அதிகமாகவே தமிழ்நாட்டில் மழை பெய்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மழை அளவு மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
அடுத்த மழைக்கான வாய்ப்பு சற்று குறையும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்ற மற்றொரு தகவல் அதிர்ச்சி தருகிறது..
