கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ஜோர்; வீட்டில் பதுக்கி வைத்து சப்ளை செய்த 2 பேர் சிக்கினர்

கோவில்பட்டியில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள்.
இதில் அதிக லாபம் கிடைப்பதால் கடைகளில் ஒளித்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு நைசாக எடுத்து கொடுத்து வியாபாரம் செய்கிறார்கள்./
இவர்களுக்கு தடை செய்யப்பட புகையிலை பொருட்கள சப்ளை செய்பவர்கள், வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து வீடுகளில் பதுக்கி வைத்து தேவைப்படுவோருக்கு சப்ளை செய்கிறார்கள்.
இது போல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ,கோவில்பட்டி ராஜிவ் நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக டிஎஸபி ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசாரும், மேற்கு போலீசாரும் இணைந்து ராஜிவ்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நடமாட்டம் காணப்பட்ட வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அந்த வீட்டில் 10 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 715 பாக்கெட் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி அருகே கரிசல்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்களான பெரியகுருசாமி (27), குருசாமி (23) என்பதும், இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி கொண்டு வந்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அங்கு புகையிலை பொருட்கள் வாங்க வந்த, பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி முருகராஜ் (52) என்பரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர்.
