தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் உள்பட 32 நிர்வாகிகள் விலகல்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அவர்கள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சாட்டினர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் அக்கட்சியில் இருந்து விலகினார். சீமான் தன்னிடம் பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியிருந்தார்
இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் விலகினார்.
இவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகினார்.
கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று இளவஞ்சி குற்றம் சாட்டி இருந்தார்.
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம் நாம் தமிழர் கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக நவம்பர் மாதம் அறிவித்தார்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் 32 பேர், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நாங்கள் விலகுவதற்கு முக்கிய காரணமே சாட்டை துரைமுருகன் மட்டும்தான். சீமான் படிப்பாளி. மிகப்பெரிய அறிவாளி, ஆனால் மிகவும் மோசமான நிர்வாகி என சுப்பையா பாண்டியன் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்காக தொடர்ந்து 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தங்களுக்கு கட்சியில் சிறிய மரியாதை கூட இல்லை என்றும் சுப்பையா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நாதக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ள சுப்பையா பாண்டியன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாதக சார்பில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகும் நிர்வாகிகள் அடுத்தடுத்து சீமான் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
