தமிழக ஆளுநரை கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், சட்டப்பேரவையில் காலம்காலமாக கடைபிடித்து வரும் மாண்பை மீறும் வகையில் நடந்து கொள்வதாகவும், திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பேரில் தூத்துக்குடியில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாளைரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
