சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது; இயக்குனர் ஆர் வி உதயகுமார்

உத்ரா ப்ரொடக்சன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குனர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. நாயகியாக சாந்தினி கவுர் நடித்துள்ளார். மற்றும் மாயா கிளம்மி, நந்தகுமார் என்.கே.ஆர். ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசியவர்கள் வருமாறு:-
இயக்குநர் ஆர் வி உதயகுமார்:-சினிமா இப்போது நன்றாக இல்லை, அரசாங்கத்திடம் எப்போதும் முறையிட்டுக் கொண்டு தான் உள்ளோம் ஆனால் திரையரங்குகளில் நம்மை வைத்துச் செய்கிறார்கள். தலைவர் எம் ஜி ஆர் ஆட்சியில் சினிமாவில் பிரச்சினையே இருந்ததில்லை. சினிமாவும் அரசியலும் கலந்ததுதான் பிரச்சனை. சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது, இருந்தால் சினிமா உருப்படாது.
இயக்குநர் பேரரசு:- இந்த திரைப்படத்தினை காதலை மையமாக வைத்து மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். நீண்ட நாள் கழித்து நல்ல காதல் படம் வருகிறது. மலேசியாவில் எடுத்து, இங்கு வெளியிடுகிறார்கள். அனைவரும் ஆதரவு தர வேண்டும்.சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்னப்படங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை, சிறிய பட்ஜெட் படங்களுக்கு மக்களை வரவைக்க, என்ன செய்ய வேண்டும். இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும்.
தயாரிப்பாளர் கே ராஜன்:-சினிமா சில நேரங்களில் நன்றாக இருக்கிறது பல நேரங்களில் நன்றாக இல்லை. கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி நட்டம். மக்கள் சின்னப்படங்களுக்கு செலவு செய்வதில்லை. படம் எடுக்க முடிகிறது ஆனால் வியாபாரம் இல்லை. க்யூபிற்கு, விளம்பரத்துக்குப் பணம் இல்லாமல் 200 படங்கள் நிற்கிறது. சின்னப்படங்களுக்கு திரையரங்குகளில் தனி விலை வையுங்கள். சின்னப்படங்களுக்கு 40, 50,70 என வையுங்கள். அப்போது மக்கள் வருவார்கள். சின்னப்படங்கள் நன்றாக இருந்தால் ஓடுகிறது. பெரிய படங்களை விட சின்னப்படங்கள் தான் அதிகம் ஜெயிக்கிறது.
இவ்வாறு கே.ராஜன் பேசினார்.
மேலும் கதையாசிரியர் கவுசல்யா நவரத்தினம் ,நடிகர் ரோபோ சங்கர், உத்ரா ப்ரொடக்சன்ஸ் ஹரி, இயக்குனர் கதிரவென் ஆகியோரும் பேசினார்கள்.
