• June 8, 2025

கோவில்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான மஞ்சள்  குலைகள்

 கோவில்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான மஞ்சள்  குலைகள்

பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மண்பானை, வண்ண கோலப்பொடிகள் இவைகள் மட்டுமின்றி முக்கிய பொருளாக மஞ்சள் குலைகளும் உள்ளது. மங்கலத்தின் சின்னமாக மஞ்சள் குலை விளங்குகிறது.

இதனால் பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்பும், பொங்கலிடும் பானையை சுற்றியும் மஞ்சள் குலையை கட்டி பெண்கள் பொங்கலிடுவது வழக்கம். 

வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில்  ஒவ்வொரு ஆண்டும் பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் செடிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

மஞ்சள் குலையாக வளர்ந்த பின்னர் பொங்கல் பண்டிகைக்கு முன்பு அறுவடை செய்து தமிழகம் மட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். வழக்கமாக இந்த மஞ்சள் குலைகள் பயிரிடப்பட்டு 6 மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும்.  

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு பயிரிடப்பட்டு உள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளன.

கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் மஞ்சள் குலை பயிரிடப்பட்டுள்ள விவசாயி ஆழ்வார்சாமி கூறியதாவது:-

 இந்த ஆண்டு மஞ்சள் குலைகள் நன்கு செழுமையாக வளர்ந்து உள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த மஞ்சள் குலையை அறுவடை செய்து சந்தைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வோம்.

அதுபோல் வியாபாரிகளும் எங்களிடம் நேரடியாக மஞ்சள் குலைகளை மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்வார்கள். இங்கு விளையும் மஞ்சள் குலைகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *