ஜெராக்ஸ் மிஷினில் 100 ரூபாய் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட்டவர் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வான்துலுக்கப்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆசைதம்பி (வயது 59). இவர் தனது வீட்டில் கலர் ஜெராக்ஸ் எந்திரம் வைத்து உள்ளார்.
அதில் 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக கூறப்படுகிறது. ஆசைதம்பி நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் ஒரு காய்கறி கடையில் பொருட்கள் வாங்கினார்.
அதற்கு கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த ரூ.100 கள்ளநோட்டை கடைக்காரரிடம் கொடுத்தார். அதை வாங்கி பார்த்த கடைக்காரர் முகம்மது சபீர் சந்தேகம் அடைந்தார். இதுகுறித்து கேட்ட போது ஆசைதம்பி முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து வைத்து விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்தனா். அவர் வைத்திருந்த 100 ரூபாய் அனைத்தும் கலர் ஜெராக்சில் அச்சடித்த கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. மொத்தம் ரூ.2,500 மதிப்புக்கு அச்சடித்த கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆசைதம்பி கள்ள ரூபாய் நோட்டுகளை பல்வேறு கடைகளில் கொடுத்து கடந்த 6 மாதங்களாக பொருட்கள் வாங்கி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசைதம்பியை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த கலர் ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
