கோவில்பட்டியில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் தனியார் நிறுவன பாதுகாவலர்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே மெயின்ரோடு-இளையரசனேந்தல் ரோடு சந்திப்பு பகுதி மிகவும் நெருக்கடியான இடமாகும். அடிக்கடி இந்த பகுதில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
போக்குவரத்து காவலர்கள் இருந்தாலும் அவர்களையும் கடந்து அத்துமீறும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பது மிகவும் கஷ்டமான பணியாகும். காலை, மாலை போக்குவரத்து காவலர்கள் இருந்தாலும் இடைப்பட்ட நேரத்தில் போக்குவரத்து காவலர்கள் இல்லாத நேரங்களில் அப்பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பாதுகாவலர் ஆறுமுக கண்ணன் என்பவரை பார்க்கலாம்,
தன்னார்வத்துடன் சாலையில் நின்று போக்குவரத்தினை சரி செய்து வருகிறார். பல நாட்களாக இந்த பணியை செய்து வருகிறார். குறிப்பாக ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டுவிட்டால் உடனடியாக எதுவும் போக்குவரத்து நெருக்கடி இருக்கிறதா? என்று பார்ப்பது மட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடி இருந்தால் அதனை சீர் செய்வார் என்று அப்பகுதி கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
இது பற்றி ஆறுமுக கண்ணன் கூறுகையில், “ஏதோ என்னால் செய்ய முடிந்த சமூகப்பணி இது. எனது வேலை நேரம் போக ஒய்வு நேரத்தில் இது போல் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்கிறேன், எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்த்து இதனை செய்யவில்லை” என்றார்.
