ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்; நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 13-ம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் இன்று மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சிகிச்சை பலனின்றி இன்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 76,
இதை தொடர்ந்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது/
அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நாளை தொண்டர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல், நாளை ராமாபுரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்து வந்தார்.
தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். பொருளாதார பிரிவில் பிஏ பட்டம் பயின்றார். சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வகித்ட பதவிகள்:
1984ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்திற்கு சென்றார்.
1996-2001ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி.
2004ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்.
* 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் வென்று எம்.பி. ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை மந்திரியாக இருந்தார்.
* 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.
* முன்னதாக 2000ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016 வரை தமிழக காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பு வகித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையடுத்து சென்னை சத்யமூர்த்தி பவனில் அரைக்கம்பத்தில் காங்கிரஸ் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
