பல அதிமுக திட்டங்களை திமுக அரசு முடக்கி உள்ளது ; டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் பேசப்பட்ட அனைத்து தரப்பட்ட மக்களால் ஏற்றுக்கொண்ட தலைவி அம்மா. பல்வேறு திட்டங்களை படைத்து அனைத்து தரப்பட்ட மக்களிடமும் அன்பாக தனது வாழ்நாளில் அனைத்து மக்களும் போற்றப்படக்கூடிய முதலமைச்சராக இருந்த புரட்சி தலைவி அம்மா டிசம்பர் 5 மறைந்தது தமிழர்களுக்கு பேரிடியாக அமைந்தது.
அவரது நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி உள்ள நிலையில் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்மாவுக்கு புகழஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் வருகின்ற 5 ஆம் தேதி அம்மா நினைவிடத்திற்கு நினைவஞ்சலி புகழஞ்சலி செலுத்த உள்ளோம்.
காலை 9.30 மணி அளவில் இருந்து 11 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு அனுமதியும் பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட ரீதியான அனுமதி வழங்க கோரி மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
\நம் தவறு செய்தால் உடனடியாக காவல்துறையினர் நீதிமன்றம் மூலமாக நமக்கு தண்டனை கொடுப்பார்கள் என்ற எண்ணம் தற்பொழுது இல்லை. அதனால் அதிக குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் கரையான் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
அதானி விவகாரத்தில் திமுக ஏன் மவுனம் காக்கிறது. திமுகவிற்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மீனவர்கள் பிரச்சினை இப்படி போன்ற பல பிரச்சனைகளை பற்றி திமுக பேசவில்லை.
அதிமுகவில் இருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை பொதுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. சசிகலா , ஓபிஎஸ் , டிடிவி மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர மற்றவர்களை கட்சியில் சேர்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் முடிவு செய்வார். தாலிக்கு தங்கம் திட்டம் மடிக்கணிணி திட்டம் உள்ளிட்ட பல அதிமுக திட்டங்களை திமுக அரசு முடக்கி உள்ளது.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.
