அதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 15-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், அடுத்தகட்ட கட்சி வளா்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சி சட்ட திட்ட விதிகளின் படி, வருகின்ற 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கட்சி அவை தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. கட்சி செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனி தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கட்சி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.