3 மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்’; தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது,.
சென்னையில் இருந்து 830 கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 630 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது
நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘பெங்கல்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா பரிந்துரை செய்துள்ளது.
இந்த புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் எனவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கபப்ட்டுள்ளன ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் விரைவாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,
..கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காணொலி வாயிலாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களிடம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.<
மேலும் கனமழையின்போது பொதுமக்களை தாழ்வான பகுதிகளில் இருந்து முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், மின்சார வசதி தடையின்றி கிடைக்கவும், வெள்ள நீர் தேங்கி பயிர்கள் சேதமடையாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
